தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Thursday, December 8, 2011

முஸ்லிம்களை இழிவுபடுத்திய சாமி- அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம் கண்டனம்

இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி.

இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்விப் பிரிவுக்கான (இதன் கீழ் தான் பொருளாதாரத்துறையும் வருகிறது) 2012ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய இந்த ஆசியர்களின் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது, இந்தப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு மதங்கள், இனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் சாமியின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சாமி பாடம் நடத்தவும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மதங்கள் ஒப்பீட்டுத் துறையின் பேராசிரியரான டயானா எக் பேசுகையில், சாமி இங்கு பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற தனது எதிர்ப்பை முதலில் கிளப்பினார். அவர் கூறுகையில், மதங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு சுயலாபம் தேட முயல்கிறார் சாமி. மதக்கலரங்களை தூண்டிவிடும் ஒருவருடன், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத துவேஷத்தை பரப்பித் திரியும் ஒருவருடன் ஹாவர்ட் போன்ற ஒரு சர்வதேச கல்வி மையம் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

அதே போல தத்துவவியல் துறை பேராசியர் சீன் கெல்லி கூறுகையில், நான் கூட முதலில் சாமியை ஆதரித்தேன். ஆனால், அவர் என்ன எழுதினார் என்பதை முழுமையாக பார்த்த பிறகு அதை ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கத்தல்ல. இது கருத்து சுதந்திரமல்ல, மதக் கலவரத்தை தூண்டிவிட தரப்படும் சுதந்திரம் என்றார்.

வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகதா போஸ் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளை வம்சாவளியாகக் கொண்ட அமெரிக்கர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாத யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்பது மாதிரி இருக்கிறது சுப்பிரமணிய சாமியின் கருத்து என்றார்.

இவ்வாறு நடந்த காரசார விவாதத்துக்குப் பின் சாமிக்கு 'குட்பை' சொல்ல ஹாவர்ட் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதே பல்கலைக்கழகத்தில் தான் 1965ம் ஆண்டு பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் சாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : thatstamil

1 comment:

  1. அமெரிக்க பழ்களைகலகத்தின் முடிவு வரவேற்க்கத்தக்கது. தான் ஒரு பெரிய மேதைனு நெனப்பு எவ்வளவு நாள் தான் சிண்டு முடிக்கிற வேல பலிக்கும் தன்னை நாடு மறக்கும் போது ஒரு பூகம்ப்பத்தை வரவழைத்து தன்னை காட்டி க்கொள்ளகூடிய மேதை தான் இந்த சாமி இன்னும் அசின்ங்க பட நெறைய இருக்கு இன்ஷா அல்லா அதுவும் வெளிச்சத்துக்கு வரும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை .

    ReplyDelete